search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நகை பணம் தப்பியது"

    கூட்டுறவு வங்கியின் பூட்டை உடைத்து கொள்ளையர்கள் உள்ளே நுழைய முயன்ற போது அலாரம் அடித்ததால் நகை, பணம் தப்பியது.

    செந்துறை:

    திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே உள்ள செந்துறையில் மங்களப்பட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் உள்ளது. இதன் தலைவராக ராமசாமி என்பவரும் செயலாளராக சிலம்பன் என்பவரும் உள்ளனர்.

    நேற்று முன் தினம் மாலை அலுவலர்கள் அனைவரும் பணியை முடித்து விட்டு வீட்டுக்கு சென்று விட்டனர். நேற்று 2-வது சனிக்கிழமை என்பதால் வங்கிக்கு விடுமுறையாகும். இதனை நோட்டமிட்டு நள்ளிரவில் கொள்ளையர்கள் உள்ளே நுழைய முயன்றனர்.

    அலுவலக வாசல் முன்பு இருந்த சி.சி.டி.வி. கேமரா இணைப்பை துண்டித்து விட்டு பூட்டை உடைத்தனர். பின்னர் உள்ளே இருந்த யு.பி.எஸ். வயரை துண்டித்து விட்டு கொள்ளையடிக்க முயன்ற போது அலாரம் பயங்கர சத்தத்துடன் ஒலித்தது. இதனால் பயந்து போன கொள்ளையர்கள் பொதுமக்கள் வந்து விடுவார்கள் என்ற பயத்தில் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர்.

    ஆனால் இந்த கூட்டுறவு சங்கம் ஊருக்கு வெளியே இருப்பதால் அலாரம் ஒலி யாருக்கும் கேட்கவில்லை. இன்று காலை அப்பகுதியில் வந்த மக்கள் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். இது குறித்து நத்தம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    சப்-இன்ஸ்பெக்டர் சேக் அப்துல்லா, வங்கி தலைவர் ராமசாமி, செயலாளர் சிலம்பன் ஆகியோர் அங்கு வந்து லாக்கரை திறந்து பார்த்தனர். அதில் வைக்கப்பட்டு இருந்த ரூ.1 கோடியே 5 லட்சத்து 89 ஆயிரம் மதிப்பிலான நகைகளும், ரூ.21 ஆயிரத்து 165 பணமும் கொள்ளை போகாமல் தப்பியது.

    இதனால் கூட்டுறவு சங்க அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் நிம்மதியடைந்தனர். ஊருக்கு ஒதுக்குப்புறமாக உள்ள இந்த வங்கியில் காவலாளி கிடையாது. சி.சி.டி.வி. கேமராவை மட்டும் பொருத்தி விட்டு சென்றுள்ளனர். தற்போது கொள்ளையர்கள் நூதனமாக கேமராவையே உடைத்து விட்டு கொள்ளையடித்து சென்று விடுகின்றனர். அதிர்ஷ்டவசமாக ரூ.1 கோடி மதிப்பிலான நகை மற்றும் பணம் தப்பியது. இது குறித்து போலீசார் கைரேகை நிபுணர்களை வரவழைத்து முக்கிய தடயங்களை பதிவு செய்து வருகின்றனர். கொள்ளையர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.

    ×